Published : 09 Jun 2021 03:28 PM
Last Updated : 09 Jun 2021 03:28 PM

வங்கக் கடலில் ஜூன் 11-ல் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

வடக்கு வங்கக் கடல் பகுதியில் ஜூன் 11ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வெப்பச் சலனம் காரணமாக ஜூன் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 11 அன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 11 மற்றும் ஜூன் 12 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை அளவு

சிதம்பரம் (கடலூர்) 11 செ.மீ., பரமக்குடி (ராமநாதபுரம்) 10 செ.மீ., நாகுடி (புதுக்கோட்டை) 6 செ.மீ., கொள்ளிடம் (மயிலாடுதுறை) 5 செ.மீ., உதகமண்டலம் (நீலகிரி), சித்தாறு (கன்னியாகுமரி) தலா 4 செ.மீ., சாத்தூர் (விருதுநகர்) காரைக்குடி (சிவகங்கை) தலா 3 செ.மீ.

கோவில்பட்டி (தூத்துக்குடி) உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) காமாட்சிபுரம் (திண்டுக்கல்) சங்கரன்கோவில் (தென்காசி) தலா 2 செ.மீ., செட்டிகுளம் (பெரம்பலூர்) திருப்பூண்டி (நாகப்பட்டினம்) பேராவூரணி (தஞ்சாவூர்) குடவாசல் (திருவாரூர்) அரியலூர், பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) தேக்கடி (தேனி) தலா 1 செ.மீ.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

வடக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 11ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதன் காரணமாக வங்கக் கடல் பகுதி, ஜூன் 9 அன்று மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதியில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜூன் 9 முதல் ஜூன் 13 வரை தெற்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 10 முதல் 13 வரை மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 10 முதல் 23 வரை மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஜூன் 11 முதல் ஜூன் 13 வரை ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக் கடல் பகுதிகள்

ஜூன் 11 முதல் 13 வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 9 முதல் 13 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x