Published : 09 Jun 2021 12:32 PM
Last Updated : 09 Jun 2021 12:32 PM

ஊரடங்கு முழுமையாக நீக்கப்படவில்லை; தேவையின்றி வருபவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

ஊரடங்கிலிருந்து தளர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்புநிலை திரும்பியதாக நினைத்துத் தேவையின்றி வெளியில் வருபவர்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா காலத்தில் தெருவிலங்குகளின் உணவு, குடிநீர் தேவை குறித்து சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தாக்கல் செய்த அறிக்கையில் நாய்களுக்கு 2,500 கிலோ வழங்கப்பட்டு அவற்றை வழங்க 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.104 குதிரைகளுக்கு 3,536 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட கணக்கில் 19 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் இருப்பிலிருந்து, சென்னை மாநகராட்சிக்கு 7 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயும், பிற 14 மாநகராட்சிகளுக்கு 11 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான விஞ்ஞானபூர்வ மற்றும் மனிதாபிமான அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு விசாரணையை 3 வாரத்திற்குத் தள்ளி வைத்தனர்.

பின்னர் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம், ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், வெளியில் நிலவும் நடைமுறைகளைப் பார்க்கும்போது ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டதுபோல பொதுமக்கள் நடந்துகொள்வதாகத் தெரிவதாகவும், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், “கரோனா முதல் அலை ஊரடங்கில் காவல்துறை மிகவும் கடுமையாக நடந்துகொண்டதால் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது. கடுமை காட்ட வேண்டாம் எனத் தற்போது காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதைப் பொதுமக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டது வெளியில் வருவதற்குக் காரணமாக இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

ஆனால் நீதிபதிகள், ஊரடங்கு காலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்ப்தைத் தடுக்க வேண்டுமெனவும், மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களைக் குறைப்பதற்காகவே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதை மக்கள் உணரும் வகையில், வெளியில் சுற்றித் திரியக் கூடாது என ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x