

மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிறப்பு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு கரோனா வார்டு இன்று தொடங்கப்பட்டது.
பொதுவாக வைரஸ்கள், பாக்ட்ரீயாக்கள் குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கும். ஆனால், கரோனா வைரஸ் சற்று வித்தியாசமாக முதல் அலையில் பெரியவர்களை அதிகம் பாதித்தது. இரண்டாவது அலையில் இளம் வயதினரை அதிகம் பாதித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 2 வாரத்திற்கு முன் வரை ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இந்த இரண்டாவது அலையில் ஏராளமானோர் உயிரிழந்தனர். மூச்சு திணறல் ஏற்பட்டு இளம் வயதினரே உயிரிழந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது.
அதனால், தற்போது பொதுமக்கள் இந்த தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசிகளை ஆர்வமாகப் போட்டு வருகின்றனர். இந்த இரண்டாவது அலை பாதிப்பில் மொத்த எண்ணிக்கையில் 3 முதல் 4 சதவீதம் குழந்தைகள் மட்டுமே சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இரண்டாவது அலையின் தாக்கமே இன்னும் நிறைவடையாத நிலையில் மூன்றாவது அலை குறித்த தகவல்கள் தற்போது பரவி வருகிறது. தற்போது அடுத்து மூன்றாவது அலையில், கரோனா வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று என மருத்துவ உலகம் எச்சரிக்கத் தொடங்கியிருக்கிறது.
அதனால், மதுரை மாவட்டத்தில் இரண்டாவது அலையில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறை அடுத்து ஏற்படக்கூடாது என்பதற்காக தட்டுப்பாடில்லாத வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி நோயாளிகள் தடையில்லாமல் சிகிச்சை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்றாவது அலை பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை அரசு மருத்துவுமனையில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் ககுழந்தைகள் சிகிச்சைகளுக்கான பிரேத்யேக கரோனா வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு தாமதம் இல்லாமல் சிகிச்சையை துரிதமாக வழங்கி அவர்களை கண்காணிக்க ‘ஜீரோ டிலே வார்டு CCC’ என்ற பெயரில் வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலு கூறுகையில், ‘‘இரண்டாவது அலையில் குழந்தைகள் மிகக் குறைந்த அளவே கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மருத்துவுமனையில் அதிகப்பட்சம் 6 பேர் வரையே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கரோனா வார்டு உருவாக்கியுள்ளோம். இதில், தற்போது 5 குழந்தைகள் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். அவர்களைக் கண்காணிக்க குழந்தைகள் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், ’’ என்றார்.