Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM

விஏஓ அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் தேவை: திப்பணம்பட்டி

தென்காசி மாவட்டம் திப்பணம் பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் தற்காலிக கட்டிடத்தில் தற்போது அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆனால், தற்காலிக கட்டிடத்தில் போதிய வசதிகள் இல்லாததால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கிராம நிர்வாக அலுவலகத்துக்கு கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “வருவாய் ஆவணங்களை பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று விநியோகம், விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை, புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உட்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய கிராமத்துக்கு தேவையான மிக முக்கியமான அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகம் ஆகும்.

திப்பணம்பட்டி கிராம நிர்வாக அலுவலகமானது திப்பணம்பட்டி மற்றும் அரியப்புரம் ஊராட்சிகளைச் சேர்ந்த 17,000 மக்களுக்கு பயன்பட்டு வருகிறது. திப்பணம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் கடந்த சில மாதங்களாக தற்காலிக கட்டிடத்தில் அலுவலகம் இயங்கி வருகிறது. தற்காலிக கட்டிடத்தில் எந்த வசதிகளும் இல்லை. சிறிய அறையில் இயங்கி வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, பழைய கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடத்தை உடனடியாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x