Published : 11 Dec 2015 11:05 AM
Last Updated : 11 Dec 2015 11:05 AM
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென தண்ணீர் திறந்து விடப் பட்டது குறித்து உண்மைகளைக் கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
எழும்பூர் நீதிமன்றம் அருகே உள்ள குடியிருப்பு பகுதி, கொளத்தூர் அக்பர் சதுக்கம், டி.வி.கே. திருமண மண்டபம் ஆகிய இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டிசம்பர் 1, 2-ம் தேதிகளில் சென்னையில் 500 மிமீ வரை மழைபெய்யும் என உலக வானிலை மையம் தமிழக அரசுக்கு தகவல் அளித்துள்ளது. ஆனாலும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடத்தினாலும், நிவாரண உதவிகள் வழங்கினாலும் முதல்வரின் படத்தை முன்னால் வைத்துக் கொண்டுதான் நடத்துகிறார்கள். பொதுநல அமைப்புகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் கொண்டு வரும் பொருள் களில் கூட முதல்வரின் படத்தை ஒட்டும் அவலம் நடந்து வருகிறது.
கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் வெளியேற்றாமல், திடீரென ஒரேநேரத்தில் 35 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தான் சென்னையில் இந்த அளவுக்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இது குறித்த உண்மைகளைக் கண்டறிய உடனடியாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.
நிவாரண உதவிகள் மக்களை முழுமையாகச் சென்றடைய அனைத்து கட்சிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ முகாம்
பின்னர் திமுக சார்பில் கொளத்தூர் நேரு திருமண மண்டபம், பி.டி.தோட்டம், குமரன் நகர், சன்னதி தெரு, குருகுலம் பள்ளி, செங்கல்வராயன் தெரு ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாம்களை ஸ்டாலின் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து துறைமுகம் தொகுதியில் ரேவ் பகுதி, விநாயகர் கோயில் தெரு, பிராட்வே முத்தியால்பேட்டை, அன்னை சத்யா நகர், பல்லவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அவர், நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT