Published : 04 Jun 2021 04:22 PM
Last Updated : 04 Jun 2021 04:22 PM

அரசின் மீதான விமர்சனம் தேசத் துரோகம் ஆகாது; உச்சநீதிமன்றத் தீர்ப்பு: கி.வீரமணி வரவேற்பு

அரசின் மீதான விமர்சனம் தேசத் துரோகம் ஆகாது என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்க தீர்ப்பு என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

“அரசின்மீதான விமர்சனம் தேசத் துரோகம் ஆகாது என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்க தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் நேற்று (3.6.2021) ஜஸ்டீஸ் U.U. லலித், ஜஸ்டீஸ் வினீத் சரண் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.

தேசத்துரோக வழக்கு செல்லாது

ஜனநாயகத்தில்- அரசியல் சட்டம் அளித்துள்ள கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என்பதையொட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வினோத் துவா என்ற பத்திரிகையாளர், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ‘கோவிட்’ என்ற கரோனா தொற்றில் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றியும், கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் புல்வாமா, பாலாகோட் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வெற்றியைக் காட்டி வாக்குச் சேகரிக்கப் பயன்படுத்திக் கொண்ட பிரச்சார நடவடிக்கைகள் என விமர்சித்து எழுதியிருந்தார்.

2020 மார்ச் 30ஆம் தேதி (30.3.2020) எழுதப்பட்ட கருத்துகளுக்காக, அப்பத்திரிகையாளர்மீது (Sedition) 124A என்ற தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளது செல்லாது, பிரதமர் மோடி அரசின் செயல்பாடு குறித்து பத்திரிகையாளர் விமர்சிப்பது தேசத்துரோகத்தின் கீழ் ஒரு போதும் வராது.

அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி விமர்சிப்பது, உடனடியாக அதற்குத்தக்க பரிகாரம் தேவை, நிலைமைகளைச் சீர்திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தானே தவிர, வேறு நோக்கத்தோடு அல்ல. எனவே, அது ஒரு போதும் அரசுக்கு எதிரான தேசத் துரோகக் குற்றம் ஆகாது என்பதும், இமாச்சல அரசின் இதன் மூலம் மக்களிடையே இவர் பீதியைக் கிளப்பினார் என்ற குற்றச்சாட்டு ஏற்கக் கூடியதல்ல என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தைக் கூறிய பத்திரிகையாளர் வினோத்துவாமீது, வீடியோ பரப்பிய 37 நாட்களுக்குப் பிறகு பாஜக அரசில் ஒருவர் கொடுத்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) தாக்கல் செய்யப்பட்டது. ஐபிசி 124A மற்றும் அவதூறு பிரிவுகள் ஐபிசி 501, 505 ஆகிய செக்‌ஷன்களின் கீழ் இப்படி வழக்குப் பதிவு செய்தது செல்லாது, என இந்த நீதிமன்றம் (உச்சநீதிமன்றம்) அதனை ரத்து செய்கிறது.

1962 லும் தீர்ப்பு....

1962ஆம் ஆண்டு இதே உச்சநீதிமன்றம் கேதார்நாத்சிங் என்பவர் வழக்கில் 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த தேசத் துரோகக் குற்றச்சாற்றுகள் பற்றிய வழக்கில் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையிலும், அதையொட்டி வந்த பல தீர்ப்புகளின் அடிப்படையிலும் இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது.

குற்றம் சுமத்தப்பட்டவர் வன்முறையை தூண்டுபவராக அரசுக்கு எதிராக அவர் கருத்து அமைந்தால் மட்டுமே குற்றச்சாற்றாக ஏற்க இயலும். அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விமர்சிக்க எந்த குடிமக்களுக்கும் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் தெளிவாக விளக்கியிருக்கிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண்

ஜனநாயகம் என்ற மக்களாட்சியில், ஆளுவோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் பாதை தவறும் போதோ அல்லது அதிகார அத்துமீறலுக்கு ஆளாகும் நிலைகளை எடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும்போதோ, ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கூறப்படும் பத்திரிகைகள், ஊடகங்கள் எடுத்து வைக்கும் விமர்சனங்களையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே 124A தேசத் துரோகம் - அரசுக்கு எதிராக 501, 505 போன்ற இ.பி.கோ. பிரிவுகளின்கீழ் வழக்குகள் போடுவது ஏற்புடைத்தல்ல.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும். (குறள் - 448)

ஆளுவோர் - அவர்கள் எக்கட்சியினராக இருந்தாலும், உள்நோக்கம் இல்லாமல் செய்யப்படும் வரை எந்த விமர்சனங்களையும் அவை எவ்வளவு கடுமையாக இருந்தாலும் - குற்றமாக அதைக் கருதக் கூடாது வரவேற்கவே வேண்டும். தங்களது போக்கில், நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால்தான், உண்மையான ஜனநாயகம் நிலைக்க முடியும்.

கருத்து சுதந்திரம் அடிப்படை உரிமை

கருத்துச் சுதந்திரம் அடிப்படை உரிமையாக ஒவ்வொரு குடிமகனுக்கும் - மகளுக்கும் வழங்கியுள்ள அரசியல் சட்டத்தின் மீது ஆட்சிப் பொறுப்பேற்கும் ஆளுவோர் அரசியல் சட்டம் மீது பிரமாணம் எடுப்பதன் தத்துவம் அப்போதுதான் பொருள் உள்ளதாக அமையும் சிறப்பான தீர்ப்பு இது. உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்துள்ளது. ஜனநாயக காப்புரிமையைப் பாதுகாக்கும் இத்தீர்ப்பை வரவேற்கிறோம்".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x