Last Updated : 02 Jun, 2021 12:51 PM

 

Published : 02 Jun 2021 12:51 PM
Last Updated : 02 Jun 2021 12:51 PM

புதுச்சேரியில் படிப்படியாகக் குறையத் தொடங்கிய கரோனா தொற்று: புதிதாக 867 பேர் பாதிப்பு; மேலும் 17 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலத்தில் படிப்படியாக கரோனா தொற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில், புதிதாக 867 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூன் 2) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,151 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 605 பேரும், காரைக்காலில் 189 பேரும், ஏனாமில் 44 பேரும், மாஹேவில் 29 பேரும் என மொத்தம் 867 (9.47 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 10 பேர், காரைக்காலில் 6 பேர், ஏனாமில் ஒருவர் என 17 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 13 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள் ஆவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,567 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.47 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 299 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 83 ஆயிரத்து 178 பேர், காரைக்காலில் 12 ஆயிரத்து 788 பேர், ஏனாமில் 6 ஆயிரத்து 182 பேர், மாஹேவில் 4 ஆயிரத்து 151 பேர் அடங்குவர்.

புதுச்சேரியில் தற்போது மருத்துவமனைகளில் 1,487 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 8 ஆயிரத்து 679 பேரும் என மொத்தமாக 10 ஆயிரத்து 166 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 1,393 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 566 (88.96 சதவீதம்) ஆக உள்ளது. இதில் புதுச்சேரியில் 74 ஆயிரத்து 84 பேர், காரைக்காலில் 10 ஆயிரத்து 868 பேர், ஏனாமில் 5 ஆயிரத்து 731 பேர், மாஹேவில் 3 ஆயிரத்து 883 பேர் அடங்குவர்.

இதுவரை 10 லட்சத்து 67 ஆயிரத்து 108 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 9 லட்சத்து 22 ஆயிரத்து 12 பரிசோதனை முடிவுகளில் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 757 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று ஒரு நாள் பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டி வந்த நிலையில், தற்போது அது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 5 நாட்களாகத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் கீழ் ஒருநாள் பாதிப்பு குறைந்து வருகிறது. இறப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இருப்பினும் பொதுமக்கள் ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றாமல், விழிப்புணடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்வது போன்றவற்றைக் கட்டாயம் கடைப்பிடித்து கரோனா தொற்று இல்லாத மாநிலமாக உருவாக்க ஒத்துழைக்க வேண்டுமென புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x