

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் நலனை அறிய தொடங்கப்பட்ட தகவல் உதவி மையம் திறந்து மூன்றே நாட்களில் செயல்படாமல் முடங்கியது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நோயாளிகளின் உறவினர்கள் வார்டுகளில் சுற்றி திரிவதால், அவர்களுக்கு கரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும், மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து வார்டுகளில் நோயாளிகளின் உறவினர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, நோயாளிகளின் சூழ்நிலைக்கு ஏற்ப ஒருசிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மற்றவர்கள் நோயாளிகளின் நலனை தெரிந்து கொள்ள, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மே 29-ம் தேதி தகவல் உதவி மையம் திறக்கப்பட்டது. இங்கு மருத்துவர் குழுவினர் பணியமர்த்தப்பட்டனர். மேலும் அறிவிப்பு செய்தவற்கு ஸ்பீக்கர், மைக் போன்ற வசதிகளும் செய்யப்பட்டன.
இந்நிலையில் திறந்து மூன்றே நாட்களில் அந்த தகவல் உதவி மையம் செயல்படாமல் முடங்கியது. அந்த மையத்தில் ஒருவர் கூட இல்லாததால் நோயாளிகளின் விவரங்களை அறிந்து கொள்ள முடியாமல் உறவினர்கள் தவித்தனர்.