பெண் நீதிபதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பெண் நீதிபதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
Updated on
1 min read

கரோனா தொற்றால் உயிரிழந்த பெண் நீதிபதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இழப்பீடாக அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நீதிபதி வனிதா (55) திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணியிட மாற்றலாகி தஞ்சை மாவட்ட நீதிபதி நிலையில் உள்ள லோக் அதாலத் நீதிமன்ற நிரந்தரத் தலைவராக மே 5ஆம் தேதி பொறுப்பேற்றார்.

அன்றே விடுமுறையில் வனிதா தூத்துக்குடிக்குச் சென்றார். அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நீதிபதி வனிதா, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது தந்தையும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது தந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 2 நாள் கழித்து நீதிபதி வனிதாவும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

நீதிபதி வனிதாவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தி:

“கரோனா நோய்த்தொற்று காரணமாக, தஞ்சாவூரில் மாவட்ட நீதிபதி நிலையில், மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) பணியாற்றிய நீதிபதி வனிதா, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நீதித் துறை அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, சிறப்பு நேர்வாகக் கருதி, 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in