சென்னை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்

சென்னை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்
Updated on
1 min read

தமிழகத்தில் சென்னை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப நிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வெப்பச்சலனம் காரணமாக 28, 29, 30-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட் டங்கள், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் ஒருசில உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக் கூடும்.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கிருஷ்ண கிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப் பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணா மலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக் கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி பதிவாகும்.

28-ம் தேதி குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், கேரளா, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கிழக்கு இலங்கை கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையுள்ள தென்தமிழக கடலோரப் பகுதியில் 28-ம் தேதி இரவு 11.30 வரை கடல் அலை 3.5 முதல் 4 மீட்டர் உயரம் வரை எழும்பக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பத்தூரில் 106 டிகிரி வெயில்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெயில் அளவு களின்படி அதிகபட்சமாக திருப்பத்தூரில் 106 டிகிரி, மதுரை விமான நிலையம், சென்னை நுங்கம் பாக்கம், வேலூர் ஆகிய இடங்களில் தலா 104, சென்னை விமான நிலையத்தில் 103, நாகப்பட்டினம், திருச்சி, கடலூர் ஆகிய இடங்களில் தலா 102, திருத்தணி, அதிராமபட்டினம், காரைக்கால் ஆகிய இடங்களில் தலா 101, தொண்டியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in