என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே இழுபறியால் அமைச்சரவை பதவியேற்பில் தொடரும் தாமதம்

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே இழுபறியால் அமைச்சரவை பதவியேற்பில் தொடரும் தாமதம்
Updated on
1 min read

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே இழுபறியால் அமைச்சரவை பதவியேற்பில் தொடர்ந்து தாமதம் நிலவுகிறது. அதனால் கரோனா பணியில் நேரடியாக முதல்வர் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

புதுவையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ்- 10 , பாஜக- 6 இடங்கள் என இக்கூட்டணி 16 இடங்களைப் பெற்று பெரும்பான்மை பெற்றது. இக்கூட்டணி முதல்வராக ரங்கசாமி கடந்த 7-ம் தேதி பதவியேற்றார். ஆனால் அமைச்சர்கள் இதுவரை பதவியேற்கவில்லை. என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே அமைச்சர்களை நியமிப்பதில் இழுபறி நீடிக்கிறது.

பெரிய மாநிலங்களில் அரசு பொறுப்பேற்று அமைச்சர்கள் துறைப் பணிகளைத் தொடங்கிய நிலையில், சிறிய மாநிலமான புதுச்சேரியில் தொடர்ந்து அமைச்சர்களை நியமிக்க முடியாமல் தாமதம் ஏற்பட்டுள்ளதால் கரோனா பணிகள் கடும் சிக்கலில் உள்ளதாக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதுபற்றி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் உட்பட 6 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெறுவர். 5 அமைச்சர்களில் பாஜக தரப்பில் துணை முதல்வர் உட்பட 3 அமைச்சர், சபாநாயகர் பதவி தர வேண்டும் எனக் கோரி வருகின்றனர். ஆனால் ரங்கசாமி 2 அமைச்சர், துணை சபநாயகர் பதவி மட்டும் தர முடியும் என்று கூறுவதால் முடிவு எட்டப்படவில்லை" என்கின்றனர்.

பாஜக தரப்பில் விசாரித்தபோது, "பாஜகவினர் 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக மத்திய அரசு நேரடியாக நியமித்தது. இதனால் பாஜக எம்எல்ஏக்கள் பலம் புதுவை சட்டப்பேரவையில் 9 ஆக உயர்ந்துள்ளது. அதோடு புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுயேச்சை எம்எல்ஏக்களில் சிலரும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அமைச்சர்களைச் சரி சமமாகப் பங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்தனர்.

இதுபற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, "பவுர்ணமி நாளான நாளை எம்எல்ஏக்கள் பதவியேற்பு நடக்கிறது. அதையடுத்து தேய்பிறை தொடங்குகிறது. ரங்கசாமி ஆன்மிகவாதி. தேய்பிறை காலத்தில் ரங்கசாமி முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பில்லை. வளர்பிறையில்தான் அடுத்த முடிவு இருக்கும் என்பதால் அமைச்சரவை பதவியேற்பு தாமதமாகும்" என்று தெரிவித்தனர்.

கரோனாவிலிருந்து குணமடைந்த முதல்வர் ரங்கசாமி நாளை முதல் கரோனா தொற்றுத் தடுப்புப் பணிகளில் நேரடியாகக் களம் இறங்கி நிவாரணம், சிகிச்சையில் உள்ள பிரச்சினைகளைச் சரிசெய்வாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in