

தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் இருந்து 7 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க இன்றுமுதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து, வெளியூர்களில் தங்கியுள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கடந்த 2 நாட்களாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றில் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
சென்னை மற்றும் பிற ஊர்களிலிருந்து பயணிக்க வசதியாக கடந்த 2 நாட்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 1,500 பேருந்துகளும், மாநிலத்தின் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே 3,000 பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டன.
அதன்படி, நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 1,331 பேருந்துகளில் 65,746 பேர், மற்ற பிற ஊர்களிலிருந்து 3,662 பேருந்துகள் பல நடைகள் இயக்கப்பட்டு 5 லட்சத்து 94,638 பேர் என மொத்தம் 6 லட்சத்து 60,384 பேர் பயணம் செய்துள்ளனர்.
7 லட்சம் பேர் பயணம்
இது தொடர்பாக போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். ஏற்கெனவே சென்னையில் இருந்து அதிக அளவில் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால், இந்த முறை சென்னையில் இருந்து பயணிகள் கூட்டம் சென்றது சற்று குறைவுதான். இருப்பினும், தமிழகம் முழுவதும் நள்ளிரவு வரையில் அரசுப் பேருந்துகளில் மட்டும் சுமார்7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்’’ என்றனர்.