

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,756 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள் ளதையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று வரை கனமழை பெய்தது. பின்னர் பகலில் விட்டு விட்டு சாரல் பொழிந்தது.
குழித்துறையில் அதிகபட்சமாக 105 மிமீ., மழை பெய்திருந்தது. கோழிப்போர்விளையில் 85 மி.மீ., சிற்றாறு ஒன்றில் 68, களியலில் 70, பூதப்பாண்டியில் 28, கன்னிமாரில் 37, மயிலாடி யில் 70, நாகர்கோவிலில் 50, பேச்சிப் பாறையில் 52, பெருஞ்சாணியில் 78, புத்தன்அணையில் 77, சிவலோகத்தில் 67, சுருளகோட் டில் 28, குளச்சலில் 36, இரணியலில் 42, பாலமோரில் 31, மாம்பழத்துறையாறில் 57, அடையா மடையில் 59, குருந்தன்கோட்டில் 43, முள்ளங்கினாவிளையில் 88, ஆனைகிடங்கில் 44, முக்கடல் அணையில் 35 மி.மீ., மழை பெய்திருந்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 52 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,929 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் நீர்மட்டம் 43.76 அடியாக உள்ளது. அணையில் இருந்து 475 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், உபரியாக 1,281 கனஅடி தண்ணீர் திறக்கப் பட்டது. மொத்தம் 1,756 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குழித்துறை தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பழையாறு கரையோரப் பகுதி மற்றும் பேச்சிப்பாறை அணை பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளத. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 65.40 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 843 கனஅடி தண்ணீர் வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் 12.2 அடியாக உயர்ந்துள்ளது.
சிற்றாறு ஒன்றில் 14.27 அடி, சிற்றாறு இரண்டில் 14.36 அடி நீர்மட்டம் உள்ளது. மழை தொடர்வதால் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான 2,040 பாசன குளங்களும் நிரம்பி மறுகால் பாய்ந்தன. கிள்ளியூர் வட்டத்தில் 6 வீடுகள் உட்பட மாவட்டம் முழுவதம் 13 வீடுகள் இடிந்து விழுந்தன. நேற்று முன்தினம் இரவில் மின்தடை ஏற்பட்டது. நேற்றும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.