சிவகங்கை மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி நிறுத்தம்; 2-வது தவணை செலுத்த முடியாமல் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி நிறுத்தம்; 2-வது தவணை செலுத்த முடியாமல் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டதால் 2-வது தவணையைச் செலுத்த முடியாமல் பல ஆயிரம் பேர் தவித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்றால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 1,600-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி செலுத்திக்கொள்ளப் பலரும் ஆர்வமாக உள்ளனர். மாவட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 54 இடங்களில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 85,724 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதில் 20,672 பேர் 2-வது தவணை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி இல்லாததால், அனைத்து மையங்களிலும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய பலர், 2-வது தவணை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கோவாக்சின் முதல் தவணையாக 1,782 பேரும், 2-வது தவணையாக 1,164 பேரும் செலுத்திக் கொண்டனர். ஆனால் மற்றவர்கள் 2-வது தவணைக்காக தினமும் அலைந்து வருகின்றனர். இதனால் கோவாக்சின் தடுப்பூசி கிடைக்கச் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்துச் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''கோவாக்சின் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். அடுத்த வாரம் வந்துவிடும். 2-வது தவணை செலுத்துவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. 2,500க்கும் மேல் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன'' என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in