

கரோனா தொற்றாளர்களின் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் நோக்கில், பரிசோதனைக்குச் சளி மாதிரி எடுத்த 24 மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டு, தொற்று உறுதி செய்யப்படுபவர்களை உடனடியாகத் தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியராக சு.சிவராசு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 19 சதவீதமாக உள்ளது. கடந்த 3 நாட்களாக இறப்பு விகிதமும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
கரோனா பரிசோதனைக்கு தினமும் ஆயிரம் 6,000 சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. பரிசோதனைக்குச் சேகரிக்கப்படும் சளி மாதிரி எண்ணிக்கையைக் குறைக்காமல், அதே நேரத்தில் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் நோக்கில், பரிசோதனைக்குச் சளி மாதிரி எடுத்த 24 மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டு, தொற்று உறுதி செய்யப்படுபவர்களை உடனடியாகத் தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பிறருக்கு கரோனா பரவுவது தடுக்கப்படும்.
ஜூன் முதல் வாரத்தில் கரோனா பரவல் தீவிரமாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். எனவே, கரோனா பரவுவதைத் தடுக்க மிகச்சிறந்த வழி முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதுமே. அரசின் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பொதுமக்கள் முறையாகக் கடைப்பிடித்து முழு ஒத்துழைப்பு அளித்தால்தான் கரோனா பரவுவதைத் தடுக்க முடியும்.
திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 19 சதவீதமாக இருப்பதை 10 சதவீதத்துக்குக் குறைவாகக் கொண்டு வருவதும், இறப்பு விகிதத்தைக் குறைப்பதும், ஆக்சிஜன் வசதிகளைப் போதிய அளவில் ஏற்படுத்துவதுமே முக்கிய நோக்கம்.
திருச்சி மாவட்டத்துக்கு நாள்தோறும் 2,000 தடுப்பூசிகள் வரப் பெறுகின்றன. 18 வயதுக்கு அதிகமானோருக்குத் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளதால் கூடுதல் தடுப்பூசிகள் வரப் பெறும். சமூக இடைவெளியுடன் தடுப்பூசி இடப்படும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கரோனா பாதுகாப்பு சிகிச்சை மையங்களில் படுக்கை வசதி பற்றாக்குறை இல்லை. அதேபோல், கடந்த 2 நாட்களாகத் திருச்சி மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் இல்லை.
படுக்கை வைத்துக்கொண்டே இல்லை என்று கூறினால், சிகிச்சைக்கு அதிகக் கட்டணம் வசூலித்தால், இறக்கும் தறுவாயில் உள்ள நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பினால் தொடர்புடைய தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கைக் கடுமையாக்குவது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும்''.
இவ்வாறு ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.