

புதுச்சேரியில் புதிதாக 1,797 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 28 வயது இளைஞர் உட்பட ஒரே நாளில் அதிகபட்சமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,749 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,212 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (மே. 18) வெளியிட்டுள்ள தகவல்:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,559 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 1,380, காரைக்கால் – 244, ஏனாம் – 123, மாஹே– 50 என மொத்தம் 1,797 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 29 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் 2 பேர் என ஒரே நாளில் அதிகபட்சமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 28 வயது இளைஞர் ஒருவர் உட்பட 18 பேர் ஆண்கள், 15 பேர் பெண்கள் ஆவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,212 ஆகவும், இறப்பு விகிதம் 1.38 ஆகவும் அதிகரித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 87 ஆயிரத்து 749 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 2,147 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 15 ஆயிரத்து 330 பேரும் என மொத்தமாக 17 ஆயிரத்து 477 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 1,670 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 69 ஆயிரத்து 60 (78.70 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 9 லட்சத்து 34 ஆயிரத்து 588 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 8 லட்சத்து 25 ஆயிரத்து 199 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 333 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது".
இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.