Last Updated : 17 May, 2021 03:14 PM

 

Published : 17 May 2021 03:14 PM
Last Updated : 17 May 2021 03:14 PM

திமுகவின் பரிந்துரைகளை ஏற்றால்தான் புதிய கல்விக் கொள்கையை ஏற்போம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி: கோப்புப்படம்

திருச்சி

திமுக அளித்த பரிந்துரைகளை ஏற்றுத் திருத்தம் செய்தால் மட்டுமே புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வோம் என, மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, நாடு முழுவதும் அந்தந்த மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களுடன் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று (மே 17) கலந்தாலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இந்தநிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மத்திய அரசிடமிருந்து கடந்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு இ-மெயில் வந்தது. அதில், இப்போதைய கரோனா காலத்தில் மாணவர்களுக்குக் கல்வி வழங்குவதை எப்படிக் கையாளலாம், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் விவகாரத்தில் தற்போதைய நிலை, ஆன்லைன் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது ஆகியன குறித்து, மே 17-ல் நடைபெறும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அந்தந்தத் துறை அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்றபோது, அவர், தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்து, பள்ளிக் கல்வித் துறைக்கென மாநில அமைச்சர் உள்ள நிலையில், அதிகாரிகள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறுவது கூட்டாட்சித் தத்துவத்துக்கு வேட்டு வைப்பதுபோல் உள்ளதாகக் கருத்து தெரிவித்தார்.

மேலும், இது பள்ளி மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய விவகாரம் என்பதால், மத்திய அரசு நடத்தும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும், அமைச்சரின் கருத்துகளைக் கேட்டு, அதைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, பதில் இ-மெயில் அனுப்பினோம். ஆனால், அந்த இ-மெயிலுக்கு இதுவரை பதில் வரவில்லை.

மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய இந்த விவகாரம், அரசியல் செய்வதற்கான களம் அல்ல. எனவே, மத்திய அரசின் கலந்தாலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டோம் என்பதைவிட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதே சரி.

2019இல் புதிய கல்விக் கொள்கை வரைவு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோதே, அதிலுள்ள சாதக, பாதகங்கள் மற்றும் திமுகவின் பரிந்துரைகளை திமுக தலைவரும், இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களும் பேசினர்.

குலக் கல்வித் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திணிப்பதாக, அண்ணாவால் அறிவிக்கப்பட்டு, மு.கருணாநிதியால் பாதுகாக்கப்பட்ட இருமொழிக் கொள்கைக்கு வேட்டுவைக்கும் வகையில் மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதாகப் புதிய கல்விக் கொள்கை உள்ளது. இட ஒதுக்கீடு குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை. 3, 5, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுத் தேர்வு முறை குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுக் கல்வி என்பது வளர்ந்த நாடுகளில்கூட இல்லை. ஆனால், மத்திய அரசோ மாநிலங்களில் யார் என்ன படிக்க வேண்டும் என்று நாங்கள்தான் முடிவு செய்வோம் என்ற அடிப்படையில், புதிய கல்விக் கொள்கையை வகுத்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையால், கிராமப்புற மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவர். எனவே, இதுபோன்று பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வை அளிக்கும் வகையில்தான் திமுக தனது பரிந்துரைகளைச் செய்திருந்தது. ஆனால், திமுக அளித்த எந்தப் பரிந்துரையையும் சேர்க்காமல், எந்த மாற்றமும் இல்லாமல் 2020-ல் புதிய கல்விக் கொள்கை மசோதா நிறைவேற்றப்பட்டது.

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் என்றைக்கும் பின்வாங்காமல், மத்திய அரசுடன் மோதல் போக்கு என்ற வகையில் அல்லாமல், எங்கள் கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள பரிந்துரைகளை ஏற்று, புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வோம்.

மத்திய அரசுடன் எங்களுக்கு ஈகோ இல்லை. கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், முதல்வருடன் ஆலோசித்து எங்களது கருத்துகளை இ-மெயில் மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும். அதுவரை, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தலா 10 பேராகப் பிரித்து 9, 10, பிளஸ் 1 வகுப்பு ஆசிரியர்கள் மூலம் ஆன்லைன் மூலம் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக துறையின் முதன்மைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தி நல்ல தீர்வு எட்டப்படும். மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியைப் பார்க்கும்போது ஆர்வம் வரும் வகையில் கூடுதல் புத்தாக்கத்துடன் செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்".

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x