

டவ்-தே புயல் இன்று (மே 17) மாலை அல்லது இரவு குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும் மஹூவாவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
’’நேற்று மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த அதி தீவிரப் புயல் டவ்- தே, இன்று காலை 5.30 மணி அளவில் உச்ச உயர் தீவிரப் புயலாக வலுப்பெற்று மத்தியக் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. தற்போது டையூவில் இருந்து 160 கிலோ மீட்டர் தெற்கு தென் கிழக்கு திசையிலும் மும்பை கடல் பகுதியில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (மே 17) மாலை அல்லது இரவு குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும் மஹூவாவுக்கும் இடையே கரையைக் கடக்கும்.
வெப்பச் சலனம் காரணமாக இன்றும் நாளையும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
கடல் உயர் அலை அறிவிப்பு
தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை (மே 18) இரவு 11.30 வரை கடல் அலை 2 முதல் 2.3 மீட்டர் உயரம் வரை எழும்பக் கூடும். மீனவர்கள் இப்பகுதிகளில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’’.
இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.