Last Updated : 13 May, 2021 12:50 PM

 

Published : 13 May 2021 12:50 PM
Last Updated : 13 May 2021 12:50 PM

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி, 13 பேர் படுகாயம்

கடலூரில் பாயிலர் வெடித்து விபத்துக்குள்ளான தனியார் தொழிற்சாலை.

கடலூர்

கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 4 பேர் உயிரிழந்தனர்.13 பேர் படுகாயம் அடைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் சிப்காட்டில் கிரிம்ஸன் ஆர்கானிக் பிரைவட் லிமிடெட் என்ற ரசாயனத் தயாரிப்பு செய்யும் நிறுவனம் உள்ளது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று (மே.13) காலையில் இந்த நிறுவனத்தில் எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்தது. இதில் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதில் கடலூர் பழைய வண்டிப்பாளையம் ராஜேந்திரன் மகன் ராஜ்குமார் (45), செம்மங்குப்பம் கருணாகரன் மகன் கணபதி (25), காரைக்காடு செந்தில்குமார் மனைவி சவீதா(35), விசோஸ்ராஜ்(26) ஆகிய 4 பேரும் கடும் பாதிப்பு அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று படுகாயம் அடைந்த சத்தியமூர்த்தி, மணிகண்டன், சபரி, ராம்குமார், செல்வி, வினோத் குமார் உட்பட 13 பேரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர் தனியார் தொழிற்சாலையில் பாயிலர் வெடித்து காயம் அடைந்தவர்களை போலீஸார், தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்துத் தகவலறிந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கடலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் சி.வெ.கணேசன் விபத்து நடைபெற்ற தொழிற்சாலைப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.

இந்த நிலையில் தொழிற்சாலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆனந்த் தலைமையில் மறியல் நடைபெற்றது. இந்த விபத்து குறித்து கடலூர் சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x