சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுடன் உடனிருப்பவர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மொத்தம் 500 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. | படம்: எஸ்.குரு பிரசாத்.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுடன் உடனிருப்பவர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மொத்தம் 500 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. | படம்: எஸ்.குரு பிரசாத்.

சேலம், தருமபுரி மாவட்டங்களில் அறநிலையத்துறை சார்பில் அரசு மருத்துவமனைகளில் 5,000 உணவுப் பொட்டலம் வழங்க ஏற்பாடு

Published on

இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டலம் சார்பில், சேலம், தருமபுரி மாவட்டங்களில், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் உடனிருப்பவர்களுக்காக, தினமும் 5 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயாரித்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சில உணவகங்கள் மட்டும் பார்சல் விற்பனையை நடத்தி வருகின்றன. இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுடன் உடனிருப்பவர்களின் பசியைப் போக்குவதற்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டலத்தில், முதல் நாளான நேற்று, சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் உடனிருப்பவர்களுக்கு, மொத்தம் 500 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் இன்று (13-ம் தேதி) முதல் அரசு மருத்துவமனைகளில் உணவுப் பொட்டலம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல இணை இயக்குநர் நடராஜன் கூறுகையில், ''சேலம் மண்டலத்தில் உள்ள சேலம், தருமபுரி மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் உடனிருப்பவர்களுக்கு வழங்க, இரு மாவட்டங்களிலும் நாளொன்றுக்கு 5 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயாரித்து வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். அன்னதானம் வழங்கப்பட்டு வரும் கோயில்களில், வழக்கமான அன்னதானம் வழங்கும் பணியும் தொடரும்'' என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in