

புதுச்சேரி மாநிலத்தில் இன்று புதிய உச்சமாக 2,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, 2-வது நாளாக இன்றும் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 13 பெண்கள் உட்பட 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (மே. 12) வெளியிட்டுள்ள தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 9,176 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 1,590, காரைக்காலில் 238, ஏனாமில் 129, மாஹேவில் 50 என, மொத்தம் 2,007 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 19 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 2 பேர், மாஹேவில் 3 பேர் என, 27 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 14 பேர் ஆண்கள், 13 பேர் பெண்கள் ஆவர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,045 ஆகவும், இறப்பு விகிதம் 1.36 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 77 ஆயிரத்து 31 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 2,065 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 13,497 பேர் என, மாநிலம் முழுவதும் 15,562 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 1,247 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 424 (78.44 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை, 8 லட்சத்து 80 ஆயிரத்து 331 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 7 லட்சத்து 89 ஆயிரத்து 822 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என, மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 963 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.