வெள்ள பாதிப்பு: மக்கள் மீண்டெழ அரசுக்கு 6 யோசனைகளை அடுக்கும் தமிழிசை

வெள்ள பாதிப்பு: மக்கள் மீண்டெழ அரசுக்கு 6 யோசனைகளை அடுக்கும் தமிழிசை

Published on

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எல்லா வகையிலும் மீண்டு வருவதற்கு அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதையொட்டி 6 யோசனைகளை அடுக்கியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

*மழை வெள்ளத்தில் இருந்து சென்னை மெது மெதுவாக மீண்டு வருகிறது. அரசாங்க, கட்சி, உதவிகளோடு தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்கள் பெருமளவு பங்கெடுத்துக் கொண்டன. இன்னும் பல நிறுவனங்கள் சேவை செய்து வருகின்றன. நிதியாக கொடுப்பவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதியாக அளித்து விடுகின்றனர்.

ஆனால், பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏதாவது கட்டமைப்பிலோ, மறு சீரமைப்பிலோ இல்லை என்றால், ஏதாவது மக்கள் நல திட்டங்கள் செய்ய நினைத்தாலோ ஒரு வழிகாட்டுதல் இல்லாமல் பரவலாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நலத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதனால் உதவ விரும்புகின்றவர்களுக்கு ஓர் வழிகாட்டுதல் இருந்தால் நலமாக இருக்கும்.

*அதிகம் பாதித்த புறநகர் பகுதிகள், காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்ட இடங்களாகவே விளங்குகின்றன. அத்தனை தனியார் மருத்துவமனைகளும் வெள்ளம் பாதித்த மக்களுக்கான தனிப்பிரிவுகளை ஒரு மாதத்திற்காவது இயக்க வேண்டும்.

*குஜராத்தில் சஞ்சீவினி திட்டம் ஏழைத் தாய்மார்களுக்கு நல்ல மருத்துவ வசதி, அவர்கள் எந்த தனியார் மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அதன் ஒருபகுதியை அரசாங்கம் செலுத்திவிடும். அதனால் எந்த தயக்கமும் இல்லாமல் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தயக்கமின்றி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட ஓர் திட்டம் வந்த உடன் அங்கே தாய் சேய் இறப்பு விகிதங்கள் கணிசமாகக் குறைந்தது.

*பல இடங்களுக்குச் செல்லும் போது, அங்கு ஒவ்வோர் குடும்பமும் தங்களின் பொருட்களையும், இயந்திரங்களையும் பிரித்துவைத்து, துடைத்து சரி செய்ய முடியுமா என்று ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதும், இதை சரி செய்ய கொடுத்தால் அதன் செலவை தாங்க முடியுமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியதைப் பார்த்ததும் பாவமாக இருக்கிறது. அதனால் எங்கு வேண்டுமானாலும் சரி செய்து கொள்ளலாம் அதன் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளலாம் என்ற திட்டத்தை தனியார் நிறுவனங்கள் மற்றும் பாதிப்படைந்த மக்களுக்கும் இடையே ஓர் இணைப்பை ஏற்படுத்தும் ஓர் திட்டம் நிறைவேற்ற வேண்டும். அப்படி என்றால் எங்கு வேண்டுமென்றாலும் சரி செய்து கொள்ளலாம்.

*முதல் பகுதியாக மீட்பு, உணவு, உடை, போர்வை, மருத்துவ உதவி போன்றவற்றை தாண்டி, இன்று மக்கள் இயற்கை பேரழிவிலிருந்து ஏற்பட்ட இழப்புகளிலிருந்தும், நஷ்டங்களிலிருந்தும் மீண்டு வருவதற்கான முயற்சிகளில் அத்தனை நிறுவனங்களும் உதவி புரிய வேண்டும்.

*சம்பளம் கூட கொடுக்க முடியாமல் சில தொழில் முனைவோர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனங்கள் லாபம் இல்லாமல் கொடுக்க முயல்வதோடு மட்டுமல்ல தங்கள் நிறுவனங்கள் தயாரித்த பொருட்களை திரும்ப பெற்றுக் குறிப்பிட்ட குறைந்த விலையில் புதுப் பொருட்களை வழங்கலாம். தங்கள் பொருட்களை விற்க விளம்பரத்திற்கு செலவிடும் செலவிலேயே இது நடைமுறைப்படுத்த முடியும்'' என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in