

புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு புதிதாக 1,633 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்டாக, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (மே 09) வெளியிட்டுள்ள தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 9,022 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 1,260 பேருக்கும், காரைக்காலில் 197 பேருக்கும், ஏனாமில் 147 பேருக்கும், மாஹேவில் 29 பேருக்கும் என, 1,633 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 22 பேர், காரைக்காலில் 2 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் ஒருவர் என, மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 965 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.35 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 71 ஆயிரத்து 709 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 2,090 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 11 ஆயிரத்து 944 பேரும் என, மாநிலம் முழுவதும் மொத்தமாக 14 ஆயிரத்து 34 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 1,158 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 710 (79.08 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 8 லட்சத்து 56 ஆயிரத்து 425 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 7 லட்சத்து 73 ஆயிரத்து 923 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என, மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 794 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.