தமிழக அரசின் முழு ஊரடங்கு அறிவிப்பு: டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்களை வாங்க திரண்ட வாடிக்கையாளர்கள்; பெட்டி, பெட்டியாக வாங்கிச் சென்றனர்

தமிழக அரசின் முழு ஊரடங்கு அறிவிப்பு: டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்களை வாங்க திரண்ட வாடிக்கையாளர்கள்; பெட்டி, பெட்டியாக வாங்கிச் சென்றனர்
Updated on
1 min read

தமிழக அரசின் முழு ஊரடங்கு அறிவிப்பால், டாஸ்மாக் மதுபானக் கடைகள், எலைட் மது விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன.

இதனுடன் இணைக்கப்பட்டு இருந்த மதுக்கூடங்கள், சில வாரங்களுக்கு முன்னரே மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. ஊரடங்கு காலத்தில் கடந்த சில நாட்களாக காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், நேற்று மற்றும் இன்று (9-ம் தேதி) மட்டும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, டாஸ்மாக் மதுக்கடைகள் முன்பு நேற்று காலை முதலே மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். சிலர் பைகளை கொண்டு வந்து அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். அதேபோல, மதுபாட்டில்கள் முழு அளவில் விற்கப்படும் எலைட் மது விற்பனைக் கடைகளில் நேற்று வரிசையில் நின்று மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றனர். சில டாஸ்மாக் கடைகளில் மாலை நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், ஊழியர்கள் சிரமப்பட்டனர். இன்றும் வாடிக்கையாளர்கள் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், விற்பனைக்காக மதுபாட்டில்களை போதிய அளவில் இருப்பு வைக்க டாஸ்மாக் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in