விருதுநகரில் 118 நகரப் பேருந்துகளில் இலவச பயணம்: பெண்கள் மகிழ்ச்சி

விருதுநகரில் 118 நகரப் பேருந்துகளில் இலவச பயணம்: பெண்கள் மகிழ்ச்சி
Updated on
1 min read

தமிழக முதல்வர் உத்தரவைத் தொடர்ந்து, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக இன்று பயணம் செய்தனர்.

தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றார். அப்போது, அவர் அறிவித்த 5 அறிவிப்புகளில் கரோனா காலத்தில் அரசு நகரப் பேருந்துகளில் பணிக்குச் செல்லும் பெண்கள், உயர் கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் இலவசம் என அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இன்று முதல் பயணிக்கத் தொடங்கினர். விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் அரசு போக்குவரத்து பணிமனைகளிலிருந்து 237 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில், சிட்டி எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். பேருந்துகள் தவிர மற்ற 50 சதவிகிதம் இயக்கப்படும் 118 நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், "விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கிராமப்புறங்களுக்கும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து அனைத்துப் பகுதிகளிலும் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்.

மேலும், கட்டணமில்லா சேவை குறித்து பயணிகள் அறியும் வகையில் பேருந்தின் முகப்பில் "மகளிர் இலவச பயண அனுமதி" என்ற வில்லை ஒட்டப்பட்டுள்ளது.

இதைப்பார்த்து பயணிகள், குறிப்பாக பெண்கள் அறிந்து கொண்டு அப்பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in