திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி: ஒட்டன்சத்திரம் தொகுதியில் வென்றவருக்கு முதன்முறையாக அமைச்சர் பதவி

ஐ.பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர். 
அர.சக்கரபாணி, உணவுத்துறை அமைச்சர். 
ஐ.பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர்.  அர.சக்கரபாணி, உணவுத்துறை அமைச்சர். 
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம் தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றவர்கள் எந்த ஆட்சியிலும் அமைச்சர் பதவி வகிக்காத நிலையில், முதன்முறையாக அங்கு வெற்றி பெற்ற அர.சக்கரபாணிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் 1952 முதல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பலர் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இதுவரை எம்எல்ஏக்களாக இருந்துள்ளனர். வாரியத் தலைவர்களாகப் பதவி வகித்துள்ளனர். ஆனால், தமிழக அமைச்சரவையில் இதுவரை ஒட்டன்சத்திரம் தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் இடம்பெற்றதில்லை.

கடந்த 1996 முதல் 2006 வரை நடந்த மூன்று தேர்தல்களில் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிபெற்ற அர.சக்கரபாணிக்கு 2006 முதல் 2011 வரை நடந்த திமுக ஆட்சியில் அரசு கொறடா பதவி வழங்கப்பட்டது.

இதையடுத்து 2011, 2016, 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மீண்டும் தொடர்ந்து மூன்று முறை வென்று இரண்டாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்றார். தொடர்ந்து ஆறு முறை ஒரே தொகுதியில் வெற்றி பெற்றதால் இவருக்கு முதன்முறையாக உணவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது முதன்முறையாக ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு அமைச்சர் தொகுதி அந்தஸ்து கிடைத்துள்ளது.

ஏற்கெனவே திமுக ஆட்சியில் இரண்டு முறை அமைச்சர் பதவி வகித்த சீனியர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு இந்த முறை கூட்டுறவுத் துறை வழங்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசின் பல திட்டங்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்தடையும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in