

டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான டெல்லி உயர் நீதிமன்றத்தின் அவமதிப்பு நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
டெல்லியில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும்நிலையில், மருத்துவ ஆக்சிஜன்பற்றாக்குறையால் சுமார் 40 நோயாளிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக மருத்துவமனைகள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதைவிசாரித்த நீதிமன்றம், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் தாமாகவழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம், ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினைக்கு மே 3-ம் தேதி இரவுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் 30-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஆக்சிஜன் நெருக்கடி தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “டெல்லிக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே உத்தரவிட்டது. ஆனால் 490 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே வருகிறது. டெல்லிக்கு முழு ஒதுக்கீடு ஆக்சிஜனும்எந்த வகையிலாவது வழங்கப்படவேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றத் தவறியதற்காக ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முறையிடப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மதியம் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆக்சிஜன் விவகாரத்தில் மத்திய அரசு மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றடெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுப்பதால் ஆக்சிஜன் கிடைத்து விடாதுஎன்று கூறிய நீதிபதிகள், இந்தவிவகாரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் சிறப்பாக செயல்படுகின்றன என்றனர். மேலும் மே 3-ம்தேதி முதல் எவ்வளவு ஆக்சிஜன்டெல்லிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய அறிக்கையைவியாழக்கிழமை காலை 10.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.