

சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட16 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர். டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் உள்ளிட்ட 11 அமைச்சர்கள் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் முதல்வர் உட்பட 30 அமைச்சர்கள் இருந்தனர். இதில், அமைச்சர்கள் நிலோஃபர் கபீல், எஸ்.வளர்மதி, ஜி.பாஸ்கரன் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. மற்ற 27 பேர் போட்டியிட்டனர்.
இதில் முதல்வர் பழனிசாமி - எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் - போடிநாயக்கனூர் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் (திண்டுக்கல்), கே.ஏ.செங்கோட்டையன் (கோபி),செல்லூர் கே.ராஜூ (மதுரை மேற்கு),பி.தங்கமணி (குமாரபாளையம்), எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்), கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஆர்.காமராஜ் (நன்னிலம்), கே.சி.கருப்பணன் (பவானி), ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்), உடுமலை கே.ராதாகிருஷ்ணன் (உடுமலைப்பேட்டை), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), கடம்பூர்ராஜூ (கோவில்பட்டி), ஆர்.பி.உதயகுமார் (திருமங்கலம்), சேவூர் ராமச்சந்திரன் (ஆரணி )ஆகிய 14 அமைச்சர்கள் வெற்றி பெற்று மீண்டும் சட்டப்பேரவைக்கு செல்கின்றனர்.
அதேநேரம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் (ராயபுரம்), சி.வி.சண்முகம் (விழுப்புரம்), வி.சரோஜா (ராசிபுரம்), எம்.சி.சம்பத் (கடலூர்), வெல்லமண்டி நடராஜன் ( திருச்சி கிழக்கு), கே.டி.ராஜேந்திர பாலாஜி (ராஜபாளையம்), கே.சி.வீரமணி (ஜோலார்பேட்டை) பி.பெஞ்சமின் (மதுரவாயல்), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்), வி.எம்.ராஜலட்சுமி (சங்கரன்கோவில்), கே.பாண்டியராஜன் (ஆவடி) ஆகிய 11 அமைச்சர்கள் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளனர்.
அவிநாசியில் போட்டியிட்ட பேரவைத் தலைவர் பி.தனபால், பொள்ளாச்சியில் போட்டியிட்ட பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.