தமிழகத்தில் கரோனா நோயாளிகள் படுக்கை பெற புது வசதி: ட்விட்டர் கணக்கு, ஹேஷ்டேக் உருவாக்கம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா நோயாளிகள் படுக்கை வசதி பெற ட்விட்டர் கணக்கு, ட்விட்டர் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினந்தோறும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று (ஏப்.29) ஒரே நாளில் 17 ஆயிரத்து 897 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 11 லட்சத்து 48 ஆயிரத்து 64 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 5 ஆயிரத்து 445 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 31 ஆயிரத்து 308 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 1 லட்சத்து 12 ஆயிரத்து 556 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் தமிழக அரசு, அரசு அதிகாரிகளைக் கோரி வருகின்றனர்.

இந்நிலையில், படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்க ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை (UCC) தமிழக சுகாதாரத்துறை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையத்தை ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 104 என்ற எண் மூலம் தொடர்புகொண்டு பொதுமக்கள் உதவி கோரலாம். இதில், பொதுமக்கள் படுக்கை வசதி குறித்துக் கேட்டறியலாம். மேலும், தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், இந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இந்த மையம், 24 மணி நேரமும் தமிழக அரசின் படுக்கை மேலாண்மையை இணையம் வழியாகக் கண்காணித்து, தேவைக்கேற்ப நோயாளிகளைப் பிரித்து, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் கரோனா நோயாளிகள் படுக்கை வசதி பெற #BedsForTN என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தலாம் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. @104GoTN என்ற ட்விட்டர் கணக்கும் இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in