கரோனா பரவல்: கர்நாடகாவில் இருந்து யாரும் ஊடுருவாமல் இருக்க நீலகிரி எல்லையில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பு

கரோனா பரவல்: கர்நாடகாவில் இருந்து யாரும் ஊடுருவாமல் இருக்க நீலகிரி எல்லையில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பு
Updated on
1 min read

கர்நாடக மாநிலத்தில் இருந்து யாரும் தமிழகத்துக்குள் ஊடுருவாமல் இருக்க நீலகிரி மாவட்ட எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியில் தமிழக போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்கும் வகையில், கர்நாடகாவில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து கூடலூர் வழியாக நாகப்பட்டினத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

இதேபோன்று, குண்டல்பேட்டில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு சாலை செல்கிறது. இதற்கிடையில், கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அங்கு வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு, அனைத்துச் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், நீலகிரி - கர்நாடகா இடையே வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி - கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் சாலை மூடப்பட்டுள்ளது. அங்கு நீலகிரி மாவட்ட போலீஸார், முகாமிட்டுத் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்களைத் திருப்பி அனுப்புகின்றனர். எனினும், காய்கறி உட்பட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

இதுகுறித்து கர்நாடக போலீஸார் கூறும்போது, "முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியில் தமிழக போலீஸார், கர்நாடக மாநிலத்தில் இருந்து யாரும் தமிழகத்துக்குள் ஊடுருவாமல் இருக்க தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in