

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து வள்ளவிளையை சேர்ந்த ஜோசப் பிராங்கிளின் கடந்த 9-ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றார். அவருடன் வள்ளவிளையை சேர்ந்த பிரெடி, யேசுதாசன், ஜான், சுரேஷ், ஜெபிஷ், விஜீஷ், ஜெனிஸ்டன், ஜெகன், செட்ரிக், மார்பின் ஆகிய 10 மீனவர்களும் சென்றனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கார்வார் தெற்கு கடல்பகுதிக்கும், கோவா கடல் பகுதிக்கும் இடைப்பட்ட ஆழ்கடல் பகுதியில் ஜோசப் பிராங்கிளின் படகுஇரண்டாக உடைந்து கிடந்துள்ளது. அந்த வழியாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்றுமுன்தினம் விபத்து ஏற்பட்டிருப்பதை பார்த்து மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, காணாமல்போன மீனவர்கள் மற்றும் படகுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ‘‘இச்சம்பவம் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மத்திய கப்பல் போக்குவரத்து துறையை கேட்டுக் கொண்டுள்ளோம்’’ என்றார்.