ஞாயிறு ஊரடங்கு: பண்டிகை காலம் போல் ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மது விற்பனை

ஞாயிறு ஊரடங்கு: பண்டிகை காலம் போல் ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மது விற்பனை
Updated on
2 min read

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் ஒரே நாளில் பண்டிகை காலம் போல் ரூ.252 கோடிக்கு மதுவை வாங்கிச் சென்றுள்ளனர் மதுபானப் பிரியர்கள்.

இந்தியா முழுவதும் கரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் ஒரு நாளைய பாதிப்பு 3.5 லட்சத்தை தாண்டிச் செல்கிறது. தினசரி 3.5 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்திலும் இதேபோன்று தினசரி 14 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகின்றனர். தினசரி 100 பேருக்கு பரிசோதனை செய்தால் அதில் 9 பேருக்கு தொற்று உறுதியாகிறது.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரு ல்ட்சம் பேர் வீடு மற்றும் மருத்துவமனையில் தனிமையில் உள்ளனர். ஆக்சிஜன், படுக்கை வசதிகள் குறித்த பயம் அதிகரித்துக்கொண்டே வருகிறது, மறுபுறம் தடுப்பூசி போடுவோர் வந்தாலும் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது. கரோனா தொற்றால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலான நிலையில் பொதுமக்கள் வருமானம் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இத்தனை களேபரங்கள் இடையேயும் மதுபானப் பிரியர்கள் தங்கள் மது அருந்தும் போக்கை கைவிடவில்லை என்பதை நேற்றைய நிகழ்வு காண்பிக்கிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, மீண்டும் கட்டுப்பாடுகள் ஞாயிறு முழு ஊரடங்கு என அரசு அறிவித்தது. இதையடுத்து காய்கறி, மளிகைசாமான் வாங்கும் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

அது நியாயமான விஷயம், ஆனால் மதுபானக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரு நாளில் மட்டும் பண்டிகைக்காலங்களில் விற்பனை ஆவதுபோன்று மதுபான விற்பனை ரூ.252 கோடிக்கு நடந்துள்ளது. கரோனா தொற்று எண்ணிக்கையில் முன்னணியில் இருப்பதுபோன்று சென்னை இதிலும் முன்னணியில் உள்ளது.

அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.58.37 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.49.43 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.48.57 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.48.32 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.47.79 கோடிக்கும் என மொத்தம் ரூ.252 கோடிக்கு நேற்று ஒரே நாளில் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in