ஓஎம்ஆர் விடைத்தாள் திருத்த முறைகேடு வழக்கு: சிபிசிஐடி விசாரணையை எதிர்த்து தேர்வு முகமை மேல் முறையீடு

ஓஎம்ஆர் விடைத்தாள் திருத்த முறைகேடு வழக்கு: சிபிசிஐடி விசாரணையை எதிர்த்து தேர்வு முகமை மேல் முறையீடு
Updated on
1 min read

நீட் தேர்வு ஓஎம்ஆர் விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து தேசிய தேர்வு முகமை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் திருத்தப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள்களை தேசிய தேர்வு முகமை அக்டோபர் 5ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. அப்போது, 700க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாகக் காட்டிய நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி திடீரென தன் மதிப்பெண்களை 248 ஆகக் குறைத்து மற்றொரு ஓஎம்ஆர் விடைத்தாள் வெளியிடப்பட்டதாகக் கூறி கோயம்புத்தூரைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ஆனால், குறைந்த மதிப்பெண்ணுடன் வெளியானதுதான் சரியான மதிப்பெண் என்றும், மாணவர் போலி ஓஎம்ஆர் விடைத்தாளைத் தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், 594 மதிப்பெண்கள் என்ற புகைப்பட ஆதாரங்கள் மாணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுப் பிரிவை (Special investigation team) அமைத்து விசாரிக்கக் கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, சைபர் குற்ற வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை நியமித்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வு முகமை, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஓஎம்ஆர் விடைத்தாளில் மதிப்பெண் குளறுபடி குறித்து மத்திய அரசே விசாரித்துவரும் நிலையில், சிபிசிஐடி விசாரணை தேவையற்றது எனவும், அதனால் தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமெனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, வழக்கு தொடர்ந்த மாணவர் மனோஜ், சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்திற்குத் தள்ளிவைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in