இரவு நேர ஊரடங்கு அமலான நிலையில் சென்னையில் 2 ஆயிரம் போலீஸார் தீவிர கண்காணிப்பு: தடையை மீறி சுற்றித் திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்

இரவு நேர ஊரடங்கு அமலான நிலையில் சென்னையில் 2 ஆயிரம் போலீஸார் தீவிர கண்காணிப்பு: தடையை மீறி சுற்றித் திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்
Updated on
1 min read

இரவு நேர ஊரடங்கின்போது சென்னையில் 2 ஆயிரம் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கரோனா தாக்கம் இரண்டாவது அலையாக இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையிலும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு (இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை) நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டது. இரவு நேர ஊரடங்கையொட்டி நகரின் முக்கிய சாலைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. சென்னையில் அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஸ்டெர்லிங் சாலை, பெரியார் ஈ.வெ.ரா சாலை, பழைய மகாபலிபுரம் சாலை என நகரின் முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டன. முக்கிய சாலைகளை இணைக்கும் இணைப்பு சாலைகளும் தடுப்பு வேலிகள் கொண்டு அடைக்கப்பட்டிருந்தன.

அண்ணா மேம்பாலம் உட்பட சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் இரவில் மூடப்பட்டன. இரவு 10 மணிக்கு பிறகு வாகனங்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. இரவு நேர ஊரடங்கின்போது சென்னையில் கண்காணிப்பு பணியில் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டனர். மேலும், 200 இடங்களில் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தடையை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த சில இளைஞர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சென்னையில் முகக்கவசம் அணியாதது தொடர்பாக நேற்று முன்தினம் மட்டும் 1,291 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 8-ம் தேதி முதல் இதுவரை 14,611 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில் ரூ.28 லட்சத்து 7,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றாதது தொடர்பாக நேற்று முன்தினம் 28 வழக்குகளும் கடந்த 8-ம் தேதி முதல் இதுவரை சென்னையில் 149 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

22 வாகனங்கள் பறிமுதல்

முதல்நாள் இரவு ஊரடங்கின்போது 22 வாகனங்களை பறிமுதல் செய்ததாகவும், முதல்நாள் என்பதால் வாகன உரிமையாளர்களை நேற்று நேரில் அழைத்து வாகனங்களை ஒப்படைத்ததாகவும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார். ஊரடங்கை மீறி இனி வாகனங்கள் இயக்கப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படும். வாகனங்கள் உடனடியாக திரும்ப ஒப்படைக்கப்படாது என்று காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in