கோப்புப்படம்
கோப்புப்படம்

நதிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு உத்தரவு

Published on

நதிகள் மற்றும் நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களைப் பெற்று. அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டம் நரையூர் கிராமத்தில் ஓடும் பாசன கால்வாயில் அப்பகுதி குடியிருப்புவாசிகள கழிவுநீரை கலப்பதாகக் கூறி ரமேஷ் மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், பாசன கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் மட்டுமின்றி கால்வாய் நீர்வரத்தும் பாதிக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிசஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகி யோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றக் கூடாது என அறிவுறுத்தப்பட் டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக் கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘ நதிகள் மற்றும் நீரோடைகளில் கழிவுநீர் கலக்காமல் பாதுகாக்க வேண்டியது அவசியமான ஒன்று. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், இந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து தேவைப்பட்டால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் நதிகள் மற்றும் கால்வாய்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை தடுக்கவும், தேவைப்படும் இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலர் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பெற்று தலைமைச் செயலர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூலை மாதத்துக்கு தள்ளி வைத் துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in