நீலகிரி அருகே மின்னல் தாக்கி 10-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு; மற்றொரு சிறுமி படுகாயம்

நீலகிரி அருகே மின்னல் தாக்கி 10-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு; மற்றொரு சிறுமி படுகாயம்
Updated on
1 min read

பந்தலூர் அம்மன்காவு பகுதியில் மின்னல் தாக்கியதில் 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மற்றொரு சிறுமி படுகாயமடைந்தார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி காவல்நிலையத்துக்கு உட்பட்ட கன்னையம்வயல் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகள் கார்த்திகா என்கிற கோகிலா (15).

இவர் அம்பலமூலா அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நெள்ளியாளம் 4-ம் ரேஞ்ச் பகுதியில் உள்ள தனது உறவினர் ரவி என்பவர் வீட்டுக்குக் கடந்த வாரம் வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மதியம் ரவி பணிபுரியும் தேயிலை எஸ்டேட்டுக்கு ரவி, அவரது மகள் ஜீவ பிரியா (10) உடன் கோகிலா சென்றார். அப்போது 2 மணியளவில் அப்பகுதியில் கன மழை பெய்துள்ளது.

இதனால், மழைக்காக அருகில் இருந்த தேயிலை ஷெட்டில் ஒதுங்கியுள்ளனர். அப்போது அப்பகுதியை மின்னல் தாக்கியுள்ளது. இதில், கோகிலா மற்றும் ரவியின் மகள் ஜீவ பிரியா (10) ஆகிய இருவரும் படுகாயமடைந்து, கீழே விழுந்தனர்.

உடனடியாக இருவரும் பாட்டவயலில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கோகிலா மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவரது உடல் பந்தலூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சிறுமி ஜீவ பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in