போராட்ட வழக்கிலிருந்து திமுக எம்எல்ஏ விடுதலை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

போராட்ட வழக்கிலிருந்து திமுக எம்எல்ஏ விடுதலை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

ரேஷன் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கே.மோகன் உள்ளிட்ட 5 பேரை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையைத் தமிழக அரசு உயர்த்தியதைக் கண்டித்து சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் 2017ஆம் ஆண்டு திமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில், அண்ணா நகர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கே.மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் எம்.கே.மோகன், அதியமான், ஏ.எம்.வேலாயுதம், சந்திரபாபு, செல்வம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆலிசியா, வழக்கிலிருந்து அண்ணா நகர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கே.மோகன் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக புகார் எதுவும் கொடுக்கப்படாத நிலையில், காவல்துறை புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளதால் அனைவரையும் விடுதலை செய்வதாகத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in