

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாளை (ஏப்.21) முதல் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக நீலகிரி மாவட்டம், கொடைக்கானல் உட்பட சுற்றுலாத் தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், முதுமலை புலிகள் காப்பகம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவை மூடப்பட்டன.
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி, வாகன சவாரி, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளின் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாளை (ஏப்.21) முதல் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகைக் குறைவு காரணமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
உதகையில் இருந்து பெங்களூருவுக்கு இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படும் இரண்டு அரசுப் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், ''பயணிகளின் சிரமத்தைத் தவிர்க்க, உதகையில் இருந்து இரவு 8 மணிக்கு பெங்களூருவுக்கு அரசுப் பேருந்து இயக்கப்படும். இந்தப் பேருந்து இரவு 10 மணிக்கு முன், முதுமலை தமிழக எல்லையைக் கடந்து கர்நாடக எல்லைக்குள் சென்றுவிடும்'' எனப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.