

கோவை அருகே ஏடிஎம் மையத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாத விரக்தியில், பாஸ்புக் பதிவு செய்யும் இயந்திரம், காசோலை செலுத்தும் இயந்திரம் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அன்னூர் அருகேயுள்ள ஒற்றர்பாளையத்தில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியின் அருகே உள்ள ஏடிஎம் மைய வளாகத்தில் பணம், காசோலை செலுத்தும் இயந்திரம், பாஸ்புக் பதிவு செய்யும் இயந்திரம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை ஏடிஎம் மையத்தில் இருந்து அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்டது. வங்கி அருகே இருந்த காவலாளி ரங்கசாமி வந்து பார்த்த போது, ஏடிஎம் மையத்துக்குள் இருந்து வெளியே வந்த மர்மநபர் ஒருவர் தப்பி ஓடினார்.
காவலாளி உள்ளே சென்று பார்த்தபோது, ஏடிஎம் மையத்தில் உள்ள கேமரா இணைப்புகள், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன. பணம் செலுத்தும் இயந்திரம், பாஸ்புக் பதிவு செய்யும் இயந்திரம், காசோலை செலுத்தும் இயந்திரங்களின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. சிசிடிவி கேமரா மீது துணி போட்டு மறைக்கப்பட்டு இருந்தது. லட்சக்கணக்கில் பணம் இருந்த ஏடிஎம் இயந்திரத்தையும் உடைக்க முயற்சித்திருந்தது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த காவலாளி ரங்கசாமி, வங்கி நிர்வாகத்துக்கும், அன்னூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார்.
அன்னூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அதில், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கும்பல், அது முடியாததால், அருகில் இருந்த மற்ற இயந்திரங்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றிருக்கலாம் எனத் தெரியவந்தது. மேலும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது ஒரு நபர் மட்டுமா? அல்லது அவரது கூட்டாளிகள் யாராவது வந்து இருந்தனரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், அதிலிருந்த பணம் தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில், அன்னூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.