கரோனா பாதித்தவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி: சென்னை மாநகராட்சி தொடங்கியது

கரோனா பாதித்தவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம்.
கரோனா பாதித்தவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம்.
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து மீண்டும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று (ஏப்.12) மட்டும் தமிழகம் முழுவதும் 6,711 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 2,105 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்தப் பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற பட்டியலை சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டது. இந்நிலையில், கரோனா தொற்று பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளில் சென்னை மாநகராட்சி இன்று (ஏப்.13) ஈடுபட்டுள்ளது.

கரோனா பாதித்தவர்கள் யார் இருக்கிறார்கள், என்ன நாட்களிலிருந்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, வீட்டில் அவர்கள் எத்தனை நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற விவரங்களுடன் கூடிய ஸ்டிக்கர்களை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஒட்டி வருகின்றனர். மண்டல வாரியாக அந்தப் பணிகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

மேலும், கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணிகளிலும் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

மேலும், ஒரு குறிப்பிட்ட தெரு அல்லது குடியிருப்பில் 3-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அப்பகுதியை கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றும் நடவடிக்கையிலும் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in