

தென் தமிழகத்தில் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
''தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக தென் தமிழ்நாடு, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் குழித்துறை, உசிலம்பட்டி பகுதிகளில் தலா நான்கு செ.மீ. மழை, ஜெயங்கொண்டம், திருபுவனம் ஆகிய பகுதிகளில் தலா மூன்று செ.மீ. மழை, ராமநாதபுரம், பிளவக்கல், கொடைக்கானலில் தலா 2 செ.மீ., ஆண்டிபட்டி, ஆழியார், கெட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது''.
இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.