

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு என சுற்றுலாத்தலங்களில் அமைக்கப்பட்ட இ-டாய்லெட், பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். வார விடுமுறை நாட்களில் இன்னும் அதிகமாக வருகை உள்ளது.
ஆனால் இவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. சுற்றுலாத்தலங்களில் குடிநீர்வசதி, கழிப்பிட வசதி என அடிப்படை வசதிகள் ஆங்காங்கே சில இடங்களில் இருந்தாலும் இவை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்த முடியாதநிலையில்தான் உள்ளன.
சுற்றுலாத்தலங்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நவீன டாய்லெட் என இ-டாய்லெட் சுற்றுத்தலாத்தலங்களான பிரையண்ட் பூங்கா, ஏரிச்சாலை என ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டது.
சில மாதங்கள் மட்டுமே இந்த இ-டாய்லெட் பயன்பாட்டில் இருந்தது. இதை கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் தற்போது பயன்பாடின்றி உள்ளது.
இதனால் சுற்றுலா வரும் பெண்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிக தொகை செலவழித்து நவீன கழிப்பறை என்ற பெயரில் அமைக்கப்பட்ட இ-டாய்லெட் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளதால் நிதியும் வீணாகி உள்ளது.
காட்சிப்பொருளாக உள்ள இ-டாய்லெட்டை பயன்பாட்டுக்கு கொண்டுவர கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதுதான் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.