புதுச்சேரியில் புதிதாக 223 பேருக்கு கரோனா தொற்று

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் புதிதாக 223 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 87 ஆயிரம் பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் (ஏப். 09) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 3,751 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 158 பேருக்கும், காரைக்காலில் 46 பேருக்கும், ஏனாமில் 10 பேருக்கும், மாஹேவில் 9 பேருக்கும் என மொத்தம் 223 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய தினம் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 687 ஆகவும், இறப்பு விகிதம் 1.58 சதவீதமாகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 43 ஆயிரத்து 465 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் 534 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,550 பேரும் என மொத்தம் 2,084 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 139 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 694 (93.62 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 6 லட்சத்து 92 ஆயிரத்து 810 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 6 லட்சத்து 36 ஆயிரத்து 73 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது.

சுகாதார பணியாளர்கள் 28 ஆயிரத்து 486 பேர் (63 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 16 ஆயிரத்து 309 பேர் (51 நாட்கள்), பொதுமக்கள் 42 ஆயிரத்து 253 பேர் (35 நாட்கள்) என மொத்தம் 87 ஆயிரத்து 48 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in