

தமிழக அரசு கரோனா கட்டுப் பாடுகளை அறிவித்ததால் அடுத்து ஊரடங்கு அமலாகுமோ என்ற அச்சத்தில் சொந்த ஊர்களுக்கு மீண்டும் செல்ல வடமாநில தொழி லாளர்கள் தயாராகின்றனர். அவர் களைத் தடுத்து மதுரையில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி, மேம்பால பணிகள் தடையின்றி நடக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தமிழக மாநகராட்சிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் நடக் கின்றன. மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க புதிய சாலைகள், பறக்கும் பாலம், உயர்மட்டப் பாலம், தரைப்பால கட்டுமானப்பணிகள் நடக்கின்றன.
இந்தப் பணிகளில் முழுக்க முழுக்க மேற்கு வங்கம், பிஹார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம் போன்ற வடமாநிலத் தொழிலாளர்கள் குடும்பத்தோடு தங்கி பணிகளைச் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கரோனா ஊர டங்கு அமலான நேரத்தில் ஒட்டுமொத்தமாக வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர். அதனால், பெரியார் பஸ்நிலையம், ஸ்மார்ட் சிட்டி பணிகள், நத்தம் பறக்கும் சாலைப்பணிகள் 6 மாதங்களுக்கு மேல் முடங்கின. அதன் பிறகு அதிகாரிகளின் தொடர் முயற்சியால் ஒப்பந்தம் எடுத்தவர்கள் மூலம் வடமாநில தொழிலாளர்களை மதுரைக்கு வரவழைத்தனர். ஆனால், 50 சதவீத தொழிலாளர்களே திரும் பினர். அதனாலே, பணிகள் மந் தகதியில் நடக்கின்றன.
கடந்த ஆண்டு அக்டோபரில் திறக்க வேண்டிய பெரியார் பஸ்நி லையம், எப்போது திறக்கப்படும் என இன்னும் தெரியவில்லை.
பஸ் நிலைய பணிகள் நிறைவடையாததால் பயணிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தினமும் திண்டாடுகின்றனர். மழைக்காலத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வெயில் காலத்தில் கடுமையான வெயிலும் புழுதியும் சேர்ந்து வதைக்கிறது.
நத்தம் பறக்கும்பாலக் கட் டுமானப்பணி தொடங்கி 3 ஆண் டுகளாகிவிட்டன. ஆனால், தற் போது வரை முடியவில்லை. இப்பணியால் நத்தம் சாலை குண்டும், குழியுமாகி, கரடு, முரடாக மாறியதால் பயணிக்கவே அச்சமாக உள்ளது. ஒரு முறை இந்தச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுவந்தால் வாகன ஓட்டிகள் உடல் முழுவதும் புழுதி படிந்துவிடுகிறது. மூச்சு திணறலும் ஏற்படுகிறது. பாலப் பணியால் குடியிருப்புகளில் புழுதி படிந்து வீட்டுக்குள் வசிக்க முடிய வில்லை.
இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளர் பெரும்பாலானோர் தற்போது அறிவித்துள்ள கரோனா கட்டுப் பாடுகளால் அச்சமடைந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோம் என பேசிக் கொள்வதோடு அதற்காக ஆயத்தமாகியும் வருகின்றனர்.
எனவே, மதுரை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வடமாநிலத் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளித்து அவர்களை இங்கேயே தங்கவைத்து தொடர்ந்து பாலப் பணிகள் தடையின்றி நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் இதில் அலட்சியம் காட்டினால் மதுரையில் மேம்பாலம், சாலைப்பணிகள் முடங்கி, போக்குவரத்து நெரிசல் பிரச்சினையானது சட்டம்- ஒழுங்குப் பிரச்சினையாக உருமாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.