சேலம் பெருமாள் கோயில் நிலம் சட்டவிரோதமாக விற்பனை: தமிழக அரசு துறைகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சேலம் பெருமாள் கோயில் நிலம் சட்டவிரோதமாக விற்பனை: தமிழக அரசு துறைகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

சேலம் பெருமாள் கோயில் நிலம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் சொத்துகளை பாதுகாப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலைய துறை, வருவாய்த்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ஏ. ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பெருமாள் கோயில் அழிக்கப்பட்டு, சிலைகள் திருடப்பட்டுள்ளது.

கோயிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறது. அந்த நிலம் வருவாய் துறை அதிகாரிகளின் உடந்தையுடன், தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால், இந்த கோயிலையும், அதன் சொத்துக்களையும் மீட்க வேண்டும்”. எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயிலுக்கு தகுதியான நபரை நியமிப்பதற்கான நடைமுறைகள் துவங்கியுள்ளதாகவும், அதன் பின் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலைய துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கோயிலில் நியமிக்கப்பட்ட உள்ள தகுதியான நபர் பற்றிய விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், கோயில் நிலங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், கோயில் சொத்துக்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களுடனும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

கோயில் நிலத்தின் தற்போதைய உரிமையாளரை கண்டுபிடித்து அறிக்கை அளிக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோயில் நிலம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in