

புதுச்சேரியில் ஒரே நாளில் புதிதாக 227 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுவரை 80 ஆயிரம் பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஏப். 4) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,416 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 160 பேருக்கும், காரைக்காலில் 63 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 3 பேருக்கும் என மொத்தம் 227 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய தினம் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 684 ஆகவும், இறப்பு விகிதம் 1.61 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 42 ஆயிரத்து 359 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 404 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,188 பேரும் என மொத்தமாக 1,592 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 109 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 83 (94.63 சதவீதம்) ஆக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 6 லட்சத்து 80 ஆயிரத்து 74 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 27 ஆயிரத்து 106 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. இதுவரை மொத்தமாக 80 ஆயிரத்து 198 பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.