

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஷ். அதிமுகவில் எந்தப் பொறுப்பிலும் அவர் இல்லாத நிலையில், முதல் முறையாக கட்சி சார்பில், திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசாவைக் கண்டித்து கோவை சுகுணாபுரத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்தினார். அப்போது ஆ.ராசாவின் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தி அதிமுகவினர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் விகாஷ் பேசுகையில், "ஆயிரம் கருணாநிதி சேர்ந்தால்கூட தமிழக முதல்வரின் தாய் தவுசாயம்மாளுக்கு ஈடாக முடியாது. அவர் தனது மகனை நல்ல விவசாயியாகவும், மனிதநேயம் மிக்க அரசியல் தலைவராகவும் வளர்த்துள்ளார். ஆனால், அவரை ஆ.ராசா கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்தால் ஆ.ராசாவால் எந்த ஊருக்குள்ளும் செல்ல முடியாது" என்றார்.
இதற்குமுன்பு கடந்த பிப்ரவரி மாதம் கோவை மாவட்ட நிர்வாகம், கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது, விகாஷ் பரிசுகளை வழங்கினார். அதேமாதம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73- வது பிறந்தநாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் கோவை பேரூர் செட்டிபாளையத்தில் நடத்திவைக்கப்பட்ட திருமண நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார்.