ஓட்டுப் போட்டால் தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை; அதிமுக வேட்பாளரின் வாக்குறுதி: தேர்தல் ஆணையம் கண்காணிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஓட்டுப் போட்டால் தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை; அதிமுக வேட்பாளரின் வாக்குறுதி: தேர்தல் ஆணையம் கண்காணிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தனக்கு வாக்களித்தால் வாக்காளர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதாகக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபடும் ஒட்டன்சத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு எதிரான புகாரைப் பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் என்.பி.நட்ராஜ் போட்டியிடுகிறார். திமுக சார்பில் திமுக கொறடா சக்ரபாணி போட்டியிடுகிறார். தொகுதியில் இருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறது. தொகுதியில் பலமுறை வென்ற சக்ரபாணி தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வாரா? அதிமுக வேட்பாளர் நட்ராஜ் தட்டிப் பறிப்பாரா? என்கிற கேள்வி எழுகிறது.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் என்.பி.நட்ராஜ் தனது உறவினர்களுக்குச் சொந்தமான மூன்று மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதாகக் கூறி, வாக்குச் சேகரிப்பதாக சுயேச்சை வேட்பாளர் கே.ஜெயராஜ் என்பவர் தேர்தல் ஆணையம், தொகுதி தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு மனு அனுப்பினார்.

அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பதில் அளித்த இந்தியத் தேர்தல் ஆணையம் தரப்பு, மனுதாரர் ஜெயராஜ் எங்களிடம் புகார் அளிக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவைப் பெற்று பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதாக அதிமுக வேட்பாளர் நட்ராஜ் பேசியதற்கான ஆதாரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க மனுதாரர் ஜெயராஜுக்கு உத்தரவிட்டு, மனுதாரர் ஜெயராஜின் மனுவைப் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in