காசிமேடு மீனவர்கள் 3 பேர் மீட்பு: படகு பழுதாகி கடலில் தத்தளித்த மேலும் இருவரை தேடும் பணி தீவிரம்

காசிமேடு மீனவர்கள் 3 பேர் மீட்பு: படகு பழுதாகி கடலில் தத்தளித்த மேலும் இருவரை தேடும் பணி தீவிரம்
Updated on
1 min read

படகு பழுதாகி கடலில் தத்தளித்த 3 மீனவர்களை கடலோர காவல் படை போலீஸார் நேற்று மீட்டனர். மேலும் 2 மீனவர்களை தேடி வரு கின்றனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப் படகு ஒன்றில் முரளி, ராஜா, விஜி, சரவணன், டை ஆகிய 5 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். இரவு 12 மணி அளவில் பட்டினப்பாக்கத்திலிருந்து 12 கடல் நாட்டிகல் மைல் தொலைவில் படகு பழுதாகி மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது படகில் இருந்த காலி டீசல் கேன்களைக் கொண்டு அனைவரும் கரை நோக்கி நீந்தி வந்துள்ளனர்.

அப்போது கோவளம் அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் கள் சிலர், கடலில் தத்தளித்த முரளி, ராஜா ஆகியோரை மீட்டனர். நெம்மேலி அருகே விஜி என்பவரையும் அப்பகுதி மீனவர்கள் மீட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோரக் காவல் படையின் மாமல்லபுரம் பிரிவு போலீஸார் அவர்களை கரைக்கு கொண்டு வந்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே 3 பேர் மீட்கப் பட்டுள்ள நிலையில் சரவணன், டை ஆகியோரை மட்டும் காண வில்லை. இதையடுத்து மரைன் கமாண்டோ போலீஸார், ஊர்க் காவல் படை வீரர்கள் 50 பேர் காணாமல்போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஆய்வாளர் பி.வேலு கூறும்போது, ‘கடலூர், புதுச்சேரி கடலோரக் காவல் படை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இருவரையும் மீட்போம்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in