பிரமாணப் பத்திரத்தில் உண்மை தகவல் தெரிவிக்காததால் புதுவை பாஜக வேட்பாளர் ஜான்குமார் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்

பிரமாணப் பத்திரத்தில் உண்மை தகவல் தெரிவிக்காததால் புதுவை பாஜக வேட்பாளர் ஜான்குமார் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
Updated on
1 min read

புதுச்சேரியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸில் போட்டியிட்டபோது பிரமாணப் பத்திரத்தில் உண்மை தகவல்களை தெரிவிக்காததால் தற்போதைய பாஜக வேட்பாளர் ஜான்குமார் மீது 117 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கை தாக்கலாகியுள்ளது.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமார் நின்று வெற்றி பெற்றார். அப்போது அவர் தாக்கல் செய்த ஆவணங்களில் ஒரு சொத்தை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தில் தேத்தாம்பாக்கம் கிராமம், குமாரப்பாளையம் ஜே.வி.ஆர் நகரில் வீட்டுமனை அமைந்துள்ள ரூ.4.5 கோடி மதிப்புள்ள 2.4 ஹெக்டேர் நிலத்தை குறிப்பிடாமல் அரசையும், தேர்தல் ஆணையத்தையும் திட்டமிட்டு ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டுள்ளதாக புதுச்சேரி போராளிகள் இயக்க பொதுச்செயலர் செல்வமுத்துராயன் புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஒதியஞ்சாலை போலீஸாருக்கு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து முதன்மை குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பாக இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் அப்போது ஜான்குமார் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியானது. அதைத்தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தேர்தலில் உண்மையை மறைத்து மனுத்தாக்கல் செய்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவானது.

இச்சூழலில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜான்குமார், அண்மையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனது மகன் ரிச்சர்ட்ஸ் உடன் பாஜகவில் இணைந்தார்.

முன்பு காங்கிரஸ் வேட்பாளராக இடைத்தேர்தலில் போட்டியிட்ட வழக்கு மீதான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனை அரசு வழக்கறிஞர் பிரவீன்குமார், தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 117 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப் பத்திரிகையில் 15 சாட்சிகள், 16 ஆவணங்கள்,13 வாக்குமூலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற உள்ள சட்டபேரவை தேர்தலில் பாஜக சார்பில் காமராஜர் நகர் தொகுதியில் ஜான்குமாரும், நெல்லித்தோப்பு தொகுதியில் அவரது மகன் ரிச்சர்ட்ஸும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in